அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Friday, December 18, 2015

தக்தீரின் வகைகள்

விதி பிரச்னையை விரிவாக எடுத்துக் கூறுமுன் இன்னொன்றையும் கூற விரும்புகின்றேன். அதாவது தக்தீர் பல வகைகளில் இருக்கிறது. அவற்றில் நான்கு வகையை மட்டும் கூறுகிறேன்.

இவை சாதாரண மக்களோடு தொடர்புடையவையாக இருப்பதால் மக்கள் அவற்றைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் அவற்றைப் புரிய வைக்கவும் முடியும்.

அவற்றில் ஒன்றுக்கு ‘தக்தீரே ஆம் தப்யீ’ என்று நான் பெயர் வைக்கிறேன்.

அதாவது உலக நடப்புகளில் இறைவன் புறமிருந்துள்ளவை. உதாரணமாக, நெருப்பின் தனிச் சிறப்பு எரிப்பதற்கும், தண்ணீரின் தனிக் சிறப்பு தாகத்தைத் தனிப்பதற்கும், அவ்வாறே விறகின் தனிச் சிறப்பு எரிதல், மேலும் நூலின் தனிச் சிறப்பு அதனை குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் ஆடையை உருவாக்குவதற்கு. உணவு வயிற்றின் சென்றால் வயிறு நிரம்ப வேண்டும். இவை அனைத்தும் இறைவன் புறமிருந்துள்ள விதிமுறையாகும். மனிதனுக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை. இந்த தக்தீர் பொதுவானதாகும். மேலும் இயல்பான விவகாரங்களுடன் தொடர்புடையதாகும். ஆன்மாவுடன் இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை. மாறாக உடலுடன் தொடர்புடையது.

நெருப்பு எரிவதும், திராட்சை மரக் கொடியில் திராட்சைப் பழம் காய்ப்பதும், பேரீச்ச மரத்தில் பேரீச்ச பழம் காய்ப்பதும், சில மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைதல், குழந்தை ஒன்பது மாதத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறத்தல் இவை அனைத்தும் சாதரணமாக நிகழக்கூடிய இயற்கை சட்டங்களாகும். இவற்றிக்கு தக்தீரே ஆம் தப்யீ (பொதுவான இயற்கை விதி) என்று பெயர்

இரண்டாவது வகை ‘தக்தீரே காஸ் தப்யீ’ (சிறப்பான இயற்கை விதி) ஆகும். நான் கூறியது போன்று ஒன்று சாதாரண சட்டங்கள். உதாரணமாக, நெருப்பு எரிய வேண்டும் என்பதாகும். சூரிய கதிர்களினால் வெப்பம் ஏற்பட வேண்டும் என்பதும், இன்ன பொருளினால் நோய் உண்டாக வேண்டும் என்பதும், இன்ன பொருளினால் உடல் குணமடைய வேண்டும் என்பதும் ஆகிய இவையனைத்தும் சாதாரண இயற்கை சட்டங்களாகும்.

இன்னொன்று, சிறப்பான இயற்கை சட்டமாகும் அதாவது, இந்த நபருக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்றும், இந்த பொருளை எரித்து விட வேண்டும் என்றும், இவர்கள் கொல்லப்பட வேண்டும், இவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் (அவருடைய மனைவி மலடியாக இருப்பினும் சரியே) என்றும் சிலவேளை குறிப்பகாக அல்லாஹ்விடமிருந்து கட்டளைகள் இறங்குகின்றன. இவை சிறப்பான சட்டங்களாகும். சாதாரன இயற்கைச் சட்டத்தின் கீழ் இவை நடப்பதில்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட நபருக்காக அல்லாஹ்வின் புறமிருந்து எப்படி வெளியாகியிருக்கிறதோ அவ்விதத்தில் சாதாரண இயற்கைச் சட்டத்தின் படி நடைபெறுவதில்லை. (அதாவது சாதாரண இயற்கைச் சட்டத்தின் படி நடைபெறுவதை விட சற்று வழக்கத்திற்கு மாற்றமான முறையில் குறிப்பிட்ட நபருக்காக வெளிப்படுகிறது)

தக்தீரின் மூன்றாவது வகை ‘தக்தீரே ஆம் ஷர்யீ’ (சாதாரண மார்க்க விதி) என்பதாகும். உதாரணமாக, மனிதன் இவ்விதமாக தொழுதால் அதற்கு இவ்வாறு பயன் கிடைக்க வேண்டும். இவ்வாறு தொழுதால் இவ்விதமாக விளைவு ஏற்பட வேண்டும். நோன்பு வைத்தால் இந்த சிறப்பான ஆன்மீக மாற்றம் ஏற்படவேண்டும் ஆகியவை.

தக்தீரின் நான்காவது வகை, தக்தீரே காஸ் ஷர்யீ (சிறப்பான மார்க்க விதி). அதன் பொருள், சிறப்பாகவும், குறிப்பாகவும் ஓர் அடியாரின் மீது அல்லாஹ் அருள் செய்வது. உதாரணமாக, இறை வசனங்கள் இறங்குதல், அது குறித்து அல்லாஹ் கூறுகின்றான்:

(அர்ரஹ்மான் அல்லமல் குர்ஆன்)

பொருள்: அளவற்ற அருளாளனாகிய இறைவன் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான். (55:1-2)

இவை தக்தீரின் நான்கு வகைகளாகும், அவற்றை புரிய வைப்பதற்காகவும், மனதில் பதியவைப்பதற்காகவும் அதற்க்கு தனிதனி பெயர்களை குறிப்பிடுகிறேன். அதாவது

1. சாதாரண இயற்கை விதி

2. சிறப்பான இயற்கை விதி

3. சாதாரண மார்க்க விதி

4. சிறப்பான மார்க்க விதி

இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். சாதாரண இயற்கை விதி மட்டுமே பௌதீக தொடர்புகளால் வெளிப்படுகிறது. மற்றெல்லா வகையான விதிகளும் – அது சிறப்பான இயற்கை விதியாயினும், சாதாரண மார்க்க விதியாயினும், சிறப்பான மார்க்க விதியாயினும் அவையனைத்தும் ஆன்மீக தொடர்புகளின் மூலம் வெளிப்படுகின்றன. அதாவது அவை உலகியல் காரணிகளால் வெளியாவதில்லை. மாறாக, அடியாருக்கு இறைவனோடுள்ள ஆன்மீகத் தொடர்பின் காரணமாக வெளியாகின்றன. எனவே இந்த தக்தீர் நம்பிக்கையாளரின் முன்னேற்றத்திற்காக வெளிப்படுகிறது; அல்லது நிராகரிப்பவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அல்லது பொது மக்களுக்கு கருனையாவோ வெளிப்படுகின்றன.

தக்தீரின் இந்த வகைகளைத் தவிர திருடவோ, கொள்ளையடிக்கவோ, தீய காரியங்களை செய்யவோ மனிதனை கட்டாயப்படுத்துகின்ற வேறு எந்த தக்தீரும் கிடையாது. இறைவன் பலவந்தமாக அவ்வாறு செய்ய வைக்கிறான் என்று கூறுபவர்கள் பொய் கூறுகின்றனர். மேலும் இறைவன் மீது குற்றம் சுமத்துகின்றனர்.